சிஎஸ்கேவிலிருந்து விலகுவதை உறுதி செய்த ஜடேஜா?
கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் இன்று வரை சமூகவலைதளங்களில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது ஜடேஜா சென்னை அணியை விட்டு வெளியேறுகிறாரா என்பது தான்.
இந்தாண்டு ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் சென்னை அணி 8 போட்டிகளில் 6 தோல்விகளை பெற்றது. இதனையடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி தோனி மீண்டும் கேப்டனானார். இது முழுக்க முழுக்க ஜடேஜாவின் முடிவு என அணி நிர்வாகம் கூறியபோதும், ஜடேஜாவுக்கு அதிருப்தி இருந்ததாக தகவல் வெளியானது.
அதற்கேற்றார் போல பாதியிலேயே அவர் தொடரில் இருந்தே வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அவர் வெளியேறியதாக தகவல் வெளியானது.
சென்னை அணியை விட்டு விலகுவதை உறுதி செய்ய அவ்வபோது சில விஷயங்களை ஜடேஜா செய்து வருகிறார். அதாவது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்களில் போடப்பட்ட சிஎஸ்கே குறித்த பதிவுகளை முற்றிலுமாக நீக்கியிருந்தார். இது வழக்கமான ஒன்றாக கூட இருக்கலாம் என பலத்தரப்பினரும் விளக்கம் தந்தனர்.
இந்நிலையில் சிஎஸ்கே வேண்டாம் என்பதை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா தனது 10ஆவது ஆண்டை நிறைவு செய்வதாக அணி நிர்வாகம் பதிவிட்டது. இதற்கு ரிப்ளை செய்திருந்த ஜடேஜா இன்னும் 10 ஆண்டுகள் விளையாடுவேன் எனக்கூறியிருந்தார்.
ஆனால் தற்போது "இன்னும் 10 ஆண்டுகள் விளையாடுவேன்" என்ற அந்த குறிப்பிட்ட பதிவை திடீரென நீக்கியுள்ளார். இதன் மூலம் சென்னை அணியில் இனி விளையாட ஜடேஜாவுக்கு விருப்பமில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. மேலும் தோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா வாழ்த்துக் கூறாததில் இருந்து அவருடனான மனக்கசப்பும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.