சேப்பாக்கில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - அஜிங்கியா ரஹானே!
கொச்சியில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 ஏலத்தில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. 34 வயதான ரஹானே, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். மொத்தம் 192 போட்டிகள். அதன் மூலம் 8268 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 158 போட்டிகளில் விளையாடி 4,074 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் விளாசி உள்ளார்.
கடந்த சீசன்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகளுக்காக அவர் விளையாடி உள்ளார். இந்நிலையில் அவர் முதல் முறையாக சென்னை அணியில் அவர் இடம் பிடித்துள்ளார்.
அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரது அடிப்படை விலையான 50 லட்ச ரூபாய்க்கு வாங்கி உள்ளது. அணியில் அவர் ராபின் உத்தப்பாவுக்கு மாற்றாக விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் ரஞ்சிக் கோப்பையில் அவர் ஹைதராபாத் அணிக்கு எதிராக 204 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள காணொளியில், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். இக்காணொளி தற்போது வைரலாகி வருகிறது.