முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி - ரிங்கு சிங்!

Updated: Mon, Aug 21 2023 11:24 IST
முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி - ரிங்கு சிங்! (Image Source: Google)

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. அதே சமயத்தில் டி20 போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக இதுவரை தோற்றதில்லை என்கின்ற சாதனையையும் தக்கவைத்து இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு முதல் இரண்டு விக்கட்டுகள் வேகமாக விழ ருத்ராஜ் 58 ரன்கள், சஞ்சு சாம்சன் 40 ரன்கள் எடுத்து கொடுத்தார்கள். இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங், ஷிவம் தூபே ஆகியோரும் அதிரடி காட்ட இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் என்ற நல்ல நிலையை எட்டியது. 

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் ஆண்டி பால்பிர்னி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தாலும், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். 

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ரிங்கு சிங் பேசும்பொழுது “நான் தைரியத்துடன் இருந்தேன். ஐபிஎல் அனுபவத்தை பயன்படுத்த முயற்சி செய்தேன். விளையாட்டை ஆழமாக கொண்டு செல்ல விரும்பினேன். 10 வருடங்களாக கடினப்பட்டு கிரிக்கெட் விளையாடியதற்கு பலன் கிடைத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நான் பேட் செய்த முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது!” என்று கூறியிருக்கிறார்.

போட்டியின் முடிவுக்குப் பிறகு பேசிய கேப்டன் பும்ரா “நான் நன்றாக உணர்கிறேன். இன்று கொஞ்சம் வேகமாக ஓடிவந்து வந்த வீசினேன். நாங்கள் இன்று நல்ல ஸ்கோர் கொண்டு வர விரும்பினோம். ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம். அதேபோல் இருந்தது. விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்கள் வலைகளில் மிகச் சிறப்பாக விளையாடி இருப்பார்கள்.

ஒரு கேப்டனாக என்னால் எதுவும் கேட்க முடியாது. எங்கள் அனைவருக்கும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. எதிர்பார்ப்புகளைப் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. நீங்கள் அந்த சுமையோடு விளையாடினால் நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள்.எதிர்பார்ப்புகளை நிர்வகிப்பதற்கு, அதை சாதாரணமாக வைத்திருப்பதற்கு நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். திரும்பி வந்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை