ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா!

Updated: Sat, May 07 2022 11:47 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அனி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதன்பின் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க முடியாமல் 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, இக்கட்டான நேரத்தில் இரண்டு ரன் அவுட்கள் ஆனாதே தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “6 பந்துகளில் 9 ரன்கள் என்பது எங்களால் இலகுவாக அடிக்க கூடிய ரன் தான், ஆனால் முக்கியமான நேரத்தில் இரண்டு ரன் அவுட்கள் ஆனாதே தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. டி.20 போட்டிகளில் ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியமானது, விக்கெட்டுகளை இழப்பது போட்டியை முழுவதுமாக மாற்றிவிடும். 

நாங்கள் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடினோம், ஆனால் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது போட்டியை மாற்றிவிட்டது. ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களை தாண்டிவிடும் என நினைத்தேன், ஆனால் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே மும்பை அணியை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை