SA vs AUS, 2nd ODI: வார்னஸ், லபுஷாக்னே மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 393 டார்கெட்!

Updated: Sat, Sep 09 2023 20:23 IST
SA vs AUS, 2nd ODI: வார்னஸ், லபுஷாக்னே மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 393 டார்கெட்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அங்கு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி , தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது. 

இதையடுத்து தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் இன்று ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிதது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ந்து அசத்தினார். அதன்பின் 64 ரன்களை எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் வர்னருடன் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 20ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 12 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 106 ரன்களை எடுத்திருந்த டேவிட் வார்னர் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் லபுஷாக்னேவுடன் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் மார்னஸ் லபுஷாக்னே தனது 2ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் ஜோஷ் இங்கிலிஸும் தனது அரைசதத்தைக் கடந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியும் 40 ஓவர்களில் 300 ரன்களை கடந்தது.

இதையடுத்து 50 ரன்களில் ஜோஷ் இங்கிலிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் ஒரு ரன்னிலும், மறுபக்கம் 19 பவுண்டரி, ஒரு சிக்சர் என 124 ரன்களைச் சேர்த்திருந்த மார்னஸ் லபுஷாக்னேவும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.  அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 392 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 393 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை