சூதட்ட விளம்பரம் குறித்து சச்சின் விளக்கம்!

Updated: Thu, Feb 24 2022 18:54 IST
Image Source: Google

கிரிக்கெட்டின் கடவுள் என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். 17 வயது முதல் கிரிக்கெட் ஆடிய சச்சின் இதுவரையில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இந்நேரம் வரையில் அந்த சாதனைகளை முறியடிக்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தடுமாறிவருகின்றனர். ஓய்வு பெற்று ஆண்டு கணக்கானாலும் சச்சினின் ரசிகர்கள் இன்றும் அவரது ரசிகர்களாகவே இருக்கிறார்கள். 

இந்நிலையில், அவர்களையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது ஒரு விளம்பரம். பொதுவாக போதை பொருட்கள், சூதாட்டம் உள்ளிட்ட விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்துவரும் சச்சினின் புகைப்படத்தை ஆன்லைன் விளம்பரத்தில் பயன்படுத்தி உள்ளது ஒரு சூதாட்ட நிறுவனம். இந்த ஆன்லைன் விளம்பரத்தை பார்த்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவாவை மையமாகக்கொண்டு இயங்கிவரும் பிக் டாடி (Big Daddy) கேசினோ மையத்தின் ஆன்லைன் விளம்பரத்தில் தான் சச்சினின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சச்சின் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அவர்கள் பயன்படுத்தி இருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார். மேலும், புகையிலை, சூதாட்டம் உள்ளிட்ட விஷயங்களை ஆதரிப்பதில்லை எனவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்," நான் கேசினோவை ஆதரிப்பது போல், சில விளம்பரங்கள் சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. நான் சூதாட்டம், புகையிலை அல்லது மதுவை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரப்பவன் இல்லை. தவறான நோக்கத்துடன் என்னுடைய புகைப்படத்தை சிலர் உபயோகித்து இருப்பது வலியை தருகிறது. 
ஆகவே, என்னுடைய சட்ட குழு இது தொடர்பான நடவடிக்கையை எடுத்துவருகிறது. இந்த தகவலை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதை நான் முக்கியமாக கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புகார் அறிக்கையினை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார். சச்சினின் புகைப்படத்தை தவறான நோக்கத்துடன் ஆன்லைன் விளம்பரத்தில் பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை