இந்தியாவில் நடைபெற்று வரும் 15ஆவது ஐபிஎல் சீசன் நாளை வருகிற 29ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய குஜராத் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வேளையில், குஜராத் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும் அந்த இரண்டாவது அணி எது என்பதனை முடிவு செய்யும் போட்டியாக நேற்றைய குவாலிபயர் 2ஆவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், டு பிளிசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.

Advertisement

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 157 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 161 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தற்போது ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதல் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ராஜஸ்தான் அணி அதன் பின்னர் தற்போது தான் இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது.

Advertisement

இந்நிலையில் முக்கியமான இந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியது குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் கூறுகையில், “கடந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததால் இந்த போட்டியில் மீண்டும் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இது போன்ற பெரிய தொடர்களில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான்.

துவக்கத்தில் சில போட்டிகளை நாங்கள் இழுந்தோம். அதன்பிறகு சிறப்பான கம்பேக் கொடுத்தோம். அந்த வகையில் தற்போது வரை நாங்கள் நல்ல அணியாகவே திகழ்ந்து வருகிறோம். இந்த ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் நிறையவே வெற்றிக்கு உதவினர். மைதானத்தில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச முடிந்தது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை நாங்கள் மிகவும் அருமையாக கட்டுப்படுத்தியதாக நினைக்கிறேன்.

ஏனெனில் இறுதி நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர்கள் இருவரையும் விரைவில் வீழ்த்தியது எங்களுக்கு பிளஸ்ஸாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. டாஸ் ஜெயிக்கும் போதே நிச்சயம் போட்டியையும் ஜெயித்து விடலாம் என்று எண்ணினேன்.

எங்கள் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மெக்காய் முதன்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு சரியான பங்களிப்பினை வழங்கிய அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதேபோன்று பட்லர் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். இன்னும் இறுதிப் போட்டி மட்டும் எஞ்சியிருக்கும் வேளையில் அவர் அதில் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News