டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த இந்திய வீரர் இடம்பிடிக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!

Updated: Sat, Jun 11 2022 17:37 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றார். 3 வருடங்களுக்குப் பிறகு 1066 நாள்கள் கழித்து அவர் இந்திய அணியில் மீண்டும் விளையாடினார். அதற்கு முன்பு 2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதியில் விளையாடினார். 

பிறகு டெல்லி டி20யில் தான் இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணிக்கு மீண்டும் அவர் தேர்வாகியுள்ளார்.

இந்திய அணி டிசம்பர் 1, 2008இல் முதல் டி20 ஆட்டத்தில் விளையாடியது. அந்த ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் கார்த்திக், ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்திய அணியில் மீண்டும் விளையாடியதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 15 வருடங்களைப் பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “என்னுடைய டி20 உலகக் கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் இருப்பார். 5-ம் நிலை அல்லது 6-ம் நிலை பேட்டராகக் களமிறங்குவார். அப்படித்தான் ஆர்சிபி அணிக்காக இந்த வருட ஐபிஎல்-லில் கடைசி ஓவர்களில் அபாரமாக விளையாடினார். 

அவருடைய ஆட்டத்திறனை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஒரு வீரர் இரண்டு, மூன்று அதிகபட்சமாக நான்கு ஆட்டங்களில் நன்றாக விளையாடி அணிக்கு வெற்றிகளை அளிக்கவேண்டும் என விரும்புவோம். 

அப்படி அவர்கள் நன்கு விளையாடிவிட்டால் நல்ல பலனை அனுபவிக்கலாம். ஆர்சிபி அணியின் மற்ற வீரர்களை விடவும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெறாவிட்டால் நான் ஆச்சர்யப்படுவேன்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை