தோனியிடம் இதனை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - சிமர்ஜீத் சிங்

Updated: Sun, Jun 05 2022 13:37 IST
Simarjeet Singh: Dhoni Have Played A Big Role In Preparing Me For 'High Pressure Situations' (Image Source: Google)

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமாகி விளையாடிய 24 வயது வீரரான சிமர்ஜீத் சிங் இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே விழித்திருந்தாலும் சிறப்பாக பந்து வீசுகிறார் என்று தோனியிடம் பாராட்டை பெற்றுள்ளார். மேலும் இனிவரும் சீசன்களில் முகேஷ் சவுத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகியோர் சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களாக திகழ்வார்கள் என்றும் படிப்படியாக அவர்கள் அனைத்தையும் கற்றுக் கொள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு அணிகளின் நெட் பவுலராக இருந்த சிமர்ஜீத் சிங் கடைசியாக டெல்லி அணிக்காக நெட் பவுலராக இருந்தபோது சிஎஸ்கே அணி அவரை அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அப்படி இந்த ஆண்டு அறிமுகமான இவர் தோனியுடன் அருகிலிருந்த விளையாடி வருவதால் பல விடயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் சில விசயங்களை தோனியிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தோனி போன்ற ஒரு பெரிய லீடரின் கீழ் விளையாடுவது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அவரிடமிருந்து பல விடயங்களை நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு வருகிறேன். முக்கியமாக இக்கட்டான சூழலிலும் அமைதியாக இருந்து நமது செயல்பாட்டை வெளிப்படுத்தும் திறனை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

எப்போதுமே எந்த ஒரு கட்டத்திலும் பொறுமையை இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்பவர் தோனி. அதனை நான் பலமுறை தொலைக்காட்சியில் கண்டுள்ளேன். அந்தவகையில் அவரிடமிருந்து அந்த ஒரு விஷயத்தை நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எந்த ஒரு சூழலிலும் பந்துவீசும் போதும் நான் பதட்டம் அடையாமலும், அணிக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் என்பதையும் நினைக்கிறேன்.

நிச்சயம் தோனி கூறும் அனைத்து வார்த்தைகளையும் காதுகொடுத்து கேட்க உள்ளேன். அவர் போட்டியின் போது மட்டுமின்றி பயிற்சியின் போதும் நிறைய ஆலோசனைகளை எனக்கு வழங்குகிறார். அவரிடம் இருந்து பெறும் ஆலோசனைகள் அனைத்தும் எனக்கு பயனுள்ளதாகவே இருந்துவருகிறது. எனவே இனிவரும் சீசனிலும் தோனியிடம் இருந்து நிறைய கிரிக்கெட்டை கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று” தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 9ஆவது இடத்தை பிடித்து வெளியேறிய நிலையில் அடுத்த ஆண்டு நிச்சயம் மீண்டும் பலமாக திரும்பி வருவோம் என்றும் அதில் தனது தாக்கத்தை பலமாக பதிப்பேன் என்றும் சிமர்ஜீத் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை