டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 2ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீரர்கள் கைல் கொட்சர், மேத்யூ கிராஸ், ஜார்ஜ் முன்சே, ரிச்சி பெர்ரிங்டன் என அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கிறிஸ் கிரீவ்ஸ் - மார்க் வாட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின் மார்க் வாட் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.