டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர், ஜேசன் ராய் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 17 ரன்களில் ராயும், 18 ரன்னில் பட்லரும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த டேவிட் மாலனும் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - லியாம் லிவிங்ஸ்டோன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 30 ரன்களில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 49 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 49 ரன்களையும், மொயின் அலி 43 ரன்களையும் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.