கரோனா எதிரொலி: யுஏஇ-க்கு மாற்றபடுகிறதா டி20 உலகக்கோப்பை?

Updated: Wed, May 05 2021 11:14 IST
T20 world cup will be moved on UAE (Image Source: Google)

கரோனா பரவல் கோரத்தாண்டவத்தால் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் கரோனா பரவல் 3ஆவது அலை வீச வாய்ப்புள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் இந்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை நடத்தவும் ஐசிசிஐ திட்டமிட்டிருந்தது.

ஆனால் தற்போது கரோனா வைரஸ் 3ஆவது அலை வர வாய்ப்புள்ளதாக எழுந்த தகவலையடுத்து, டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 16 அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, நவம்பரில் இதேபோன்று கரோனா வைரஸ் தாக்குதல் நேர்ந்தால், போட்டியைத் தொடர்ந்து நடத்துவதிலும், வேறு இடத்துக்கு மாற்றுவதிலும் சிக்கல் ஏற்படும். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மாதத்துக்குள் அதற்கான முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மத்திய அரசின் முக்கிய உயர் அலுவலர்களுடன் பிசிசிஐ உயர் அலுவலர்கள் டி20 உலகக் கோப்பையை மாற்றுவது குறித்த ஆலோசித்துள்ளனர். இதற்கு மத்திய அரசு தரப்பிலும் ஏறக்குறைய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகக் கோப்பை தொடர் நடத்தும் இடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு, தேதிகள் குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அலுவலர் கூறுகையில், “ஐபிஎல் தொடரை 4 வாரங்கள் நிறுத்தியுள்ளது, இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என்பதற்கான ஒரு எச்சரிக்கை. டி20 உலகக் கோப்பை போட்டி நடக்கும் நேரத்தில் இந்தியாவில், கரோனா 3ஆவது அலைகூட வீசலாம் எனப் பேசப்படுகிறது.

இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்தியாவில் சூழல் இயல்புக்கு வரும்வரை அடுத்த 6 மாதங்களுக்கு உலகக் கோப்பையில் பங்கேற்கும் முக்கிய நாடுகள் இந்தியா வருவதை விரும்பாது.

அதுமட்டுமல்லாமல் தொடரின் பாதியில் பயணம் செய்து வேறு இடத்துக்குச் செல்லவும் வீரர்களும், குடும்பத்தினரும் சம்மதிக்க மாட்டார்கள். மேலும் கரோனா 2ஆவது அலை இருந்தாலும், ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்துவோம், பயோ-பபுள் பாதுகாப்பானது என்பதை உலகிற்குத் தெரிய வைக்க விரும்பினோம். ஆனால், பயோ-பபுள் சூழலே கேள்விக்குறியாகிவிட்டது’’ எனத் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை டி20 தொடர் நடத்தப்படும் என்றால், ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே போட்டிகள் அனைத்தும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை