டிஎன்பிஎல் 2022: ஹரி நிஷாந்த் அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Mon, Jun 27 2022 15:50 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸும் லைகா கோவை கிங்ஸும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 7.5 ஓவரில் 67 ரன்களை முதல் விக்கெட்டுக்கு சேர்த்து கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 37 ரன்னிலும், ஸ்ரீதர் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் முகிலேஷும், ஷிஜித் சந்திரனும் அபாரமாக பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் விளாசி ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 

ஸ்ரீதர் 20 பந்தில் 30 ரன்கள் அடித்தார். ஷாருக்கானும் தன் பங்கிற்கு 8 பந்தில் 19 ரன்களை அடித்து முடித்து கொடுக்க, 20 ஓவரில் 188 ரன்களை குவித்த கோவை அணி, 189 ரன்கள் என்ற கடின இலக்கை திண்டுக்கல் அணிக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு விஷால் வைத்தியா - ஹரி நிஷாந்த் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரி நிஷாந்த் அரைசதம் கடக்க, மறுமுனையில் 49 ரன்கள் எடுத்திருந்த விஷால் வைத்தியா ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹரி நிஷாந்தும் 60 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மனி பாரதி, ஹரிஹரன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனாலும் ஏஜி பிரதீப் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் 19.2 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை