விராட் கோலியை சேசிங்கில் தடுத்து நிறுத்த முடியவில்லை - டாம் லேதம்! 

Updated: Sun, Oct 22 2023 23:29 IST
விராட் கோலியை சேசிங்கில் தடுத்து நிறுத்த முடியவில்லை - டாம் லேதம்!  (Image Source: Google)

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி 95 ரன்களும், ரோஹித் சர்மா 46 ரன்களும், ஜடேஜா 39 ரன்களும் எடுத்து அசத்தினர். இதன் மூலம் இந்திய அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தோல்விக்குப்பின் பேசிய நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம், “நாங்கள் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டோம். இருப்பினும் நல்ல துவக்கத்தை கடைசி 10 ஓவர்களில் சரியாக பயன்படுத்தவில்லை. அங்கே நாங்கள் சொதப்பி விட்டோம். இந்தியாவுக்கு அதற்கான பாராட்டுக்கள். ரச்சின் – மிட்சேல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் போட்டு கடைசி 10 ஓவரில் அதிரடி காட்டுவதற்கான அடித்தளத்தை கொடுத்தனர். 

அந்த இடத்தில் அசத்துவதற்கான நல்ல அணியும் எங்களிடம் இருக்கிறது. ரச்சின் போலவே அசத்திய மிட்சேல் 100 ரன்கள் அடித்தார். குறிப்பாக மிட்சேல் சிறப்பாக விளையாடி கட்டுக்கோப்புடன் செயல்பட்டு எங்களின் இதர பேட்ஸ்மேன்களுக்கு உதவினார். ஆனால் நாங்கள் அதை சரியாக பொருத்த முயற்சிக்க வேண்டும். மேலும் பந்து வீச்சில் நாங்கள் இரட்டை விக்கெட்டுகளை எடுக்கவில்லை. 

இருப்பினும் எங்களுடைய பவுலர்கள் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். விராட் கோலி சேசிங்கில் அபாரமாக செயல்படுகிறார். அவரை தடுத்து நிறுத்துவது கடினமாகும். அடுத்ததாக இதே மைதானத்தில் எங்களுக்கு ஒரு பகல் போட்டி இருக்கிறது. அதில் நாங்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை