விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, ஹைதராபாத் அணிகள் வெற்றி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று முதல் தொடங்கின. இதில் தனது முதல் ஆட்டத்தில் பிகாரை எதிர்கொண்டது தமிழக அணி. கர்நாடகம் - அலூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பிகார் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
தமிழக அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 49 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.
அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஹைதராபாத் - ஹிமாச்சல் பிரதேச அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ராயூடு 156 ரன்களையும், திலக் வர்மா 132 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஹிமாச்சல பிரதேச அணிக்கு கடைசிவரை போராடியும் 48 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 335 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதற்கிடையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக விஜெடி முறைப்படி ஹைதராபாத் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஹிமாச்சல பிரதேச அணி தரப்பில் அமித் குமார் 103 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 31.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் தனுஷ் கொடீன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகியோ அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அரைசதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன்மூலம் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தியது.