கேப்டன் பதவிலிருந்து நீக்கப்பட்ட போது வேதனையடைந்தேன் - டேவிட் வார்னர் ஓபன் டாக்!

Updated: Tue, Nov 16 2021 16:48 IST
Warner on blistering World Cup after poor IPL (Image Source: Google)

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.  டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

முன்னதாக 2021 ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 195 ரன்கள் மட்டுமே எடுத்தார் டேவிட் வார்னர். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 போட்டி நடைபெற்றபோது கேப்டன் பதவியைப் பறிகொடுத்ததோடு அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பைப் பயிற்சி ஆட்டங்களில் 0,1 என மோசமாக விளையாடினார். 

இதனால் அவருடைய பேட்டிங் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. எனினும் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் முக்கியமான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்தார்.

இந்நிலையில் ஐபிஎல் 2021 அனுபவம் பற்றி பேசிய வார்னர், “ஐபிஎல் அணியில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காததற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எப்போதும் போல பயிற்சியில் தீவிரமாகவே ஈடுபட்டேன். ஒருநாள் கூட தவறவில்லை. வலைப்பயிற்சியின்போது நன்றாக விளையாடினேன். 

எப்போது வேண்டுமானாலும் நான் வழக்கம்போல நன்றாக விளையாட ஆரம்பித்திருக்கலாம். கேப்டன் பதவியைப் பறித்து அணியிலிருந்தும் நீக்கியதால் வேதனையடைந்தேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியும். விளையாட்டில் உண்மையாக இருந்தால், தொடர்ந்து உழைத்தால் உங்களுக்கு 2ஆவது வாய்ப்பு கிடைக்கும். 

Also Read: T20 World Cup 2021

தொடர்ந்து உழைத்ததால் பலன் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு எவ்விதப் புகாரும் இல்லை. இந்திய ரசிகர்கள் எனக்கு எப்போதும் ஆதரவளித்தார்கள். அவர்களுக்காகத்தான் நாம் விளையாடுகிறோம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை