டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரால் கம்பேக் கொடுக்க முடியாது - வாசிம் ஜாஃபர்!

Updated: Sun, Jun 26 2022 18:58 IST
Wasim Jaffer Explains Why All-Rounder Hardik Pandya Is Unlikely To Play In The Test Circuit (Image Source: Google)

அயர்லாந்துக்கு சென்றுள்ள இந்தியா அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் அந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஜூலை 1இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதால் சமீபத்திய ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்தியாவை வழி நடத்துகிறார். 

அவரது தலைமையில் பயிற்சியாளராக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் ஐபிஎல் தொடரில் அசத்திய ராகுல் திரிப்பாதி, சஞ்சு சாம்சன் ஆகியோருடன் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான வீரர்கள் அயர்லாந்தை எதிர்கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணியில் மொத்தமாக வாய்ப்பை இழந்து நின்ற ஹர்திக் பாண்டியா இன்று கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளது அவரின் கடின உழைப்பை காட்டுகிறது. கடந்த 2016இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் தனது அபாரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு திறமையால் 2018 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக அசத்தினார்.

அதனால் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் ஒரு வழியாக இந்தியாவுக்கு தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டதாக இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் 2019 உலகக் கோப்பைக்கு பின் காயமடைந்த அவர் அதிலிருந்து குணமடைந்து ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக பந்து வீசாமல் பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டார். 

இருப்பினும் 2021 டி20 உலக கோப்பையில் பந்து வீசுவார் என்ற நம்பிக்கையில் அவரை தேர்வு குழுவினர் இந்திய அணியில் சேர்த்தனர். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே ஒரு ஓவர்கூட வீசாத அவர் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டது இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது.

அதனால் கடுப்பான தேர்வுக் குழுவினர் இனிமேல் முழுமையாக குணமடைந்து பந்து வீசும் வரை இடமில்லை என்று அதிரடியாக நீக்கினார்கள். இருப்பினும் மனம் தளராமல் பயிற்சி எடுத்த அவர் ஐபிஎல் 2022 தொடரில் 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்து மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அத்துடன் அனுபவமில்லாத கேப்டன்சிப் பதவியில் அற்புதமாக செயல்பட்டு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டிய அவர் அதே தேர்வுக்குழுவினர் தாமாக மீண்டும் தேர்வு செய்யும் அளவுக்கு மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்ததை போல டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா திரும்புவது கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். 

இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “பின்பகுதியில் செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சையால் ஒருநாளில் 15 – 18 ஓவர்களை ஹர்டிக் பாண்டியா வீசுவதை நீங்கள் பார்க்க முடியாது. அதேபோல் 5 – 6 ஆகிய இடங்களில் அவரால் பேட்டிங் செய்ய முடியுமா? டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் அதையும் பார்க்க முடியாது.

எனவே அதன் அடிப்படையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் திரும்புவதற்கு அவர் நீண்ட தொலைவில் உள்ளார். டி20யில் 4 ஓவர்கள் அல்லது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 10 ஓவர்கள் வீசி பேட்டிங்கில் 4, 5, 6 ஆகிய இடங்களில் களமிறங்குவது அவரால் நீண்ட நாட்கள் விளையாட உதவும்.

நாம் நிறைய கிரிக்கெட் போட்டிகள் நடப்பதையும் அதில் வீரர்கள் காயம் அல்லது ஓய்வு பெறுவதையும் பார்க்கிறோம். தற்போது ரோகித் சர்மா அனைத்து வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருக்கிறார். ஆனால் அவரால் அனைத்து தொடர்களிலும் வழிநடத்த முடியாது. 

34 வயதை கடந்த அவரால் நீண்டகாலம் கேப்டன்ஷிப் செய்ய முடியாது. எனவே ஒவ்வொரு கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்களை இந்தியா பார்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஐபிஎல் இருப்பதால் ஹர்திக் பாண்டியா போன்றவர்களை நம்மால் தொடர்ந்து கண்டுபிடிக்க முடியும்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை