ஆஃப்கானிஸ்தானை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

Updated: Wed, Nov 03 2021 18:14 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை கடினமாக்கி கொண்டுள்ளது. 

இனி ஆடும் 3 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றாலும் கூட, நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இது பெரும்பாலும் சாத்தியமற்றது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தேர்வும், இந்திய அணியின் முடிவுகளும் மோசமாக இருந்ததால், அவைதான் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. இந்திய அணி தேர்வு முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி, இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணி இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது. எனவே ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இவற்றில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. 

எனவே இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியை எளிதாக எடை போட்டுவிட முடியாது. இந்த உலக கோப்பையில் பவர்ப்ளேயில் சராசரியாக அதிக ரன்களை குவித்த அணியாக ஆஃப்கானிஸ்தான் அணி திகழ்கிறது. மேலும், ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகிய 3 உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை வைத்துக்கொண்டு எதிரணிகளை அச்சுறுத்திவரும் ஆஃப்கானிஸ்தான் அணியை இந்திய அணி மிகக்கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது, 2018 ஆசிய கோப்பை, 2019 ஒருநாள் உலக கோப்பை ஆகிய தொடர்களில் இந்திய அணிக்கு ஆஃப்கானிஸ்தான் அணி கடும் சவால் அளித்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தானை இந்திய அணி எளிதாக எடுத்துக்கொள்ளாமல் கவனமாக ஆட வேண்டும்.

Also Read: T20 World Cup 2021

இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானை இன்று இந்திய அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில் இந்த போட்டி குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், “ஆஃப்கானிஸ்தானை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முதிர்ச்சியடைந்த மற்றும் சிறந்த அணியாக திகழ்கிறது ஆஃப்கானிஸ்தான். நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். மிகச்சிறந்த ஸ்பின் ஜோடியான முஜிப் உர் ரஹ்மான் - ரஷீத் கான் ஜோடியை பெற்றிருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஆட்டம் முடியும் வரை எதையுமே கணிக்க முடியாது; எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று ஹர்பஜன் சிங் இந்திய அணியை எச்சரித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை