ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு பேரதிர்ச்சியாக கேப்டன் தமிம் இக்பால் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன், மிதுன், மொசடெக் ஹொசைன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் லிட்டன் தாஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து, ஒற்றை ஆளாய் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அவருடன் இணைந்து விளையாடிய மஹ்முதுல்லா 33 ரன்களையும், அஃபிஃப் ஹொசைன் 45 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை குவித்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 102 ரன்களை சேர்த்தார். ஜிம்பாப்வே அணி தரப்பில் லூக் ஜொங்வே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.