BAN vs SL, 1st Test: 188 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இலங்கை!

Updated: Sat, Mar 23 2024 17:59 IST
BAN vs SL, 1st Test: 188 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இலங்கை! (Image Source: Google)

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. இதன்மூலம் 68 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் கலித் அஹ்மத், அறிமுக வீரர் நஹித் ரானா ஆகியோர் தலா 3 மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியிலும் தொடக்க வீரர் ஸகிர் ஹசன் 9 ரன்களுக்கும், கேப்டன் நஹ்முல் ஹொசை சாண்டோ 5 ரன்களுக்கும், மொமினுல் ஹக் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை இதில் மஹ்முத் ஹசன் ஜாய் 9 ரன்களுடன் தொடர்ந்தார்.

இதில் மஹ்முத் ஹசன் 12 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய ஷஹதத் ஹொசைன் 18 ரன்களுக்கும், லிட்டன் தாஸ் 25 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய தைஜுல் இஸ்லாமும் 47 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 92 ரன்கள் முன்னிலைப்பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணியில் நிஷன் மதுஷ்கா 10 ரன்களுக்கும், குசால் மெண்டிஸ் 3 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த திமுத் கருணரத்னே - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய தினேஷ் சந்திமால் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த திமுத் கருணரதேன் 52 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து கேப்டன் தனஞ்செயா டி சில்வா - விஷ்வா ஃபெர்னாண்டோ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றனர்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் தனஞ்செயா டி சில்வா 23 ரன்களுடனும், விஸ்வா ஃபெர்னாண்டோ 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் நஹித் ரானா 2  விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலையுடன் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை