இரு அணிகளுமே இந்த டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது - ஷாகில் அல் ஹசன்!

Updated: Sun, Dec 25 2022 18:42 IST
2nd Test: Shakib Al Hasan Rues Missed Chances In Fielding After Three-wicket Loss To India (Image Source: Google)

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது முதலில் அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன்காரணமாக ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி பழிதீர்த்து கொண்டது.

அந்த வகையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவுக்கு வந்தது.

அதன்படி இந்த இரண்டாவது போட்டியின் கடைசி இன்னிங்சில் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே ஒரு கட்டத்தில் தோல்வியை நோக்கி பயணித்தது. ஆனால் 8 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களையும் மற்றும் அஸ்வின் 42 ரன்களையும் சேர்த்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், “இந்த போட்டியில் எங்களது அணியின் அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். இந்த போட்டியில் நிச்சயம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனாலும் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம். இருப்பினும் இது ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக அமைந்தது.

இதுபோன்ற சுவாரசியமான போட்டிகளைத்தான் ரசிகர்களும் காண விரும்புவார்கள். இரு அணிகளுமே இந்த டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நம்புகிறேன். இந்திய அணியின் வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஸ்வின் ஆகியோரே காரணமாக திகழ்ந்தனர். இக்கட்டான சூழலிலும் அவர்கள் இருவரும் அற்புதமாக பாட்னர்ஷிப் அமைத்து அவர்களது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாகவே விளையாடியிருந்தாலும் எங்களிடம் உள்ள சில குறைகள் ஆங்காங்கே தென்பட்டது. இருந்தாலும் நாங்கள் மிகச்சிறப்பாக போராடியதாக நினைக்கிறேன். இந்த வருடம் எங்களுக்கு நல்ல நினைவுகளை கொண்ட வருடமாக அமைந்தது. அடுத்த வருடம் இன்னும் மிகச்சிறப்பாக அமையும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை