ஆதில் ரஷீத் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலந்து அணியில் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 43 ரன்களையும் சேர்த்தனர்.
அவர்களைத் தவிர்த்து கேப்டன் ஜோஸ் பட்லர் 24 ரன்களைச் சேர்த்த்தை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 25, சூர்யகுமார் யாதவ் 14, திலக் வர்மா 18, வாஷிங்டன் சுந்தர் 10, அக்ஸர் படேல் 15, துருவ் ஜுரெல் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய ஹர்திக் பாண்டியாவும் 40 ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில், இந்தியா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “இப்போட்டியில் கொஞ்சம் பனியின் தாக்கம் இருக்கும் என்று நினைத்தேன். மேலும் ஹார்திக் பாண்டியா -அக்ஸர் படேல் ஆகியோர் பேட்டிங்ல் இருந்த தருணத்தில் எங்கள் அணி வெற்றிக்கு 24 பந்துகளில் 55 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் இப்போட்டி எங்கள் கைவசம் இருந்ததாக நினைத்தோம். அச்சமயத்தில் நாங்கள் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய விரும்பினோம்.
ஆனால் அச்சமயம் ஆதில் ரஷித் எங்களை அழுத்ததிற்கு தள்ளினார். அதனால்தான் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக உள்ளார். இப்போட்டியின் வெற்றிக்கான முழு புகழும் அவரையே சாரும். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை நாம் எப்போதும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். ஏனெனில் பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்து அணியை 127 ரன்களுக்கு 8 ரன்கள் என்ற நிலையில் இருந்து 170 ரன்களை அடிக்க விட்டுவிட்டோம்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் பேட்டிங்கிலும், நாம் கற்றுக்கொள்ள சில விஷயங்கள் உள்ளன. மேலும் இப்போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கும் முகமது ஷமி காயத்தில் மீண்டு இவ்வாறு பந்துவீசுவதைப் பார்பதற்கு நன்றாக உள்ளது. அதேபோல் வருண் சக்ரவர்த்தியும் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அதற்கான பலனை அவர் தற்போது அனுபவித்து வருகிறார். எங்கள் தவறுகளைத் திருத்தி மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.