வெற்றிக்கு எப்படி பங்களிப்பது என்பது என் கைகளில் இருக்கிறது - சூர்யகுமார் யாதவ்!

Updated: Wed, Aug 09 2023 12:05 IST
வெற்றிக்கு எப்படி பங்களிப்பது என்பது என் கைகளில் இருக்கிறது - சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி நேற்று கயானா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்கள் இலக்காக வைக்க, அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு சூரியகுமார் 44 பந்துகளில் பத்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கி தந்தார்.

மிகச் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் சதம் அடிப்பார் என்ற நிலையில் ஆட்டம் இழந்தார். மேலும் நேற்றைய மூன்றாவது போட்டியின் ஆட்டநாயகனாக சூரியகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு நாள் தொடரிலும் வாய்ப்பு பெற்றிருந்த சூரியகுமார் யாதவுக்கு இந்த சுற்றுப்பயணத்தில் இது முதல் அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ், “நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. நான் வெளியே சென்று என்னை வெளிப்படுத்த முயற்சி செய்தேன். நான் பேட்டிங் செய்த விதத்தில் எல்லாம் வரிசையாக விழுந்து கொண்டே இருந்தது. மூன்றாவது சதத்தை தவற விட்டீர்களா? என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். முதலில் இன்று அடித்திருந்தால் அது எனது நான்காவது சர்வதேச சதம் என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விருப்பப்படுகிறேன்.

ஆனால் நான் இப்படியான சாதனைகள் மைல் கற்களை பற்றி யோசிப்பது இல்லை. 47 இல்லை 98 ரன்களில் இருந்தாலும் நான் எனது அணிக்குத் தேவையானதை சூழ்நிலைக்கு ஏற்ப செய்வேன். நான் எனது அணிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்வேன். நாங்கள் நிறைய டி20 போட்டிகளில் விளையாடுகிறோம் எனவே அது பழகிவிட்டது. நாங்கள் அதிக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது இல்லை. 

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஒருநாள் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டது. அங்கு நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்ய வேண்டும். இறுதியில் ஓவர்கள் குறைவாக இருக்கும் பொழுது டி20 கிரிக்கெட் போல மாறி விளையாட வேண்டும். எனது ஒருநாள் கிரிக்கெட் நம்பர்கள் மோசமாக இருக்கிறது. இதை ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு வெட்கமில்லை. 

ரோஹித்தும் ராகுல் டிராவிட்டும் என்னிடம் நீங்கள் இது அதிகம் விளையாடாத ஃபார்மேட் என்று கூறினார்கள். நான் முதலில் 40, 45 பந்துகள் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். பின்பு அதிரடியாக விளையாடிக் கொள்ளலாம். இப்பொழுது இந்தப் பொறுப்பை ஒரு வாய்ப்பாக மாற்றுவது மற்றும் அணியின் வெற்றிக்கு எப்படி பங்களிப்பது என்பது என் கைகளில் இருக்கிறது எனவே நான் இதை நோக்கி உழைக்கப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை