இதே நிலை நீடித்தால் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் இல்லாமல் போய்விடும் - ஷின்வாரி உருக்கம்!

Updated: Fri, Sep 10 2021 22:13 IST
Afghan Cricket Board Begs To Keep Game 'Out Of Politics' (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தலிபான்கள் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்நாட்டின் கிரிக்கெட் எதிர்காலம் தற்போது கேள்விகுறியாகியுள்ளது.

சமீபத்தில், பிபிசி வானொலி நேர்காணலில் பேட்டியளித்த ஆப்கன் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக், காபூலில் உள்ள தனது அணி வீரர்கள் கண்களில், குரல்களில், பேச்சில் கூட பயம் இருக்கிறது. தலிபான்கள் எந்த விளையாட்டு வீரரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று கூறியுள்ளனர், ஆனால் அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது" என்று நவீன் கூறியுள்ளார்.

அதேபோல், சமீபத்தில் ட்வீட் செய்திருந்த முன்னாள் ஆப்கன் கேப்டன் முகமது நபி, "நான் உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்; ஆஃப்கன் ஒரு சிக்கலுக்குள், குழப்பத்திற்கும் செல்வதை தயவுசெய்து தடுத்துவிடுங்கள். எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்" என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தலிபான் அரசு பொறுப்பேற்றவுடன் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தலிபான் செய்திதொடர்பாளர் வாசிக் கூறும்போது, "ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியின் கீழ் பெண்கள் கிரிக்கெட் மட்டுமின்றி வேறு எந்த விளையாட்டுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் ஆண்கள் கிரிக்கெட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என்றார்.

இந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தலிபான் தடை விதித்தால் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம் என்று ஆஸ்திரேலியா எச்சரித்தது. ஏனெனில், ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நவம்பர் 27ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபர்ட்டில் நடைபெறுகிறது. 

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய அளவில் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சியை ஊக்குவிப்பது முக்கியமானது. கிரிக்கெட்டுக்கான எங்கள் பார்வை என்னவென்றால் இது எல்லோருக்கும் பொதுவான ஒரு விளையாட்டு. நாங்கள் எல்லா மட்டத்திலும் இந்த விளையாட்டை ஆதரிக்கிறோம். மகளிர் கிரிக்கெட்டை ஆதரிக்க முடியாது என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்ததாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதித்தால் ஆப்கானிஸ்தான் உடனான டெஸ்ட் போட்டியை ரத்து செய்வோம். இதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை" என்று கூறியிருந்தது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் தலைமை செயல் அதிகாரி ஹமீத் ஷின்வாரி உருக்கமுடன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆஃப்கானிஸ்தானின் கலாச்சாரம் மற்றும் மதச் சூழலை மாற்றும் சக்தி ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு இல்லை. தயவுசெய்து எங்களுக்காக கதவை திறந்து வையுங்கள்! எங்களுடன் வாருங்கள். மற்ற நாடுகளின் கிரிக்கெட் சங்கங்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போல் நடவடிக்கை எடுத்தால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலகத்திலிருந்து அந்நியப்படும். எங்கள் நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சி தடைபடும். இன்னும் சொல்லப்போனால், ஆப்கானிஸ்தானில் இருந்தே கிரிக்கெட் காணாமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை