Emerging Asia Cup 2024: ரமந்தீப் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஃப்கான்!

Updated: Fri, Oct 25 2024 23:08 IST
Image Source: Google

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் நிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜுபைத் அக்பரி - செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்திய நிலையில், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 137 ரன்களை எட்டியது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஜுபைத் அக்பரி 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் செதிகுல்லாவுடன் இணைந்த கரீம் ஜானத்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட செதிகுல்லா அடல் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தார்விஷ் ரசூலியும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கரீம் ஜானத் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த கரீம் ஜானத் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கல் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரஷிக் தர் சலாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா - பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்னிலும், பிரப்ஷிம்ரன் சிங் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் திலக் வர்மாவும் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ஆயூஷ் பதோனி - நெஹல் வதேரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் வதேரா 20 ரன்னிலும், ஆயூஷ் பதோனி 31 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் ஜோடி சேர்ந்த ரமந்தீப் சிங் மற்றும் நிஷாந்த் சிந்து ஆகியோரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரமந்தீப் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 8 பவுண்டரி, 2 சிக்ஸர்க்ள் என 62 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய ஏ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கஸான்ஃபர், அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை