இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 3ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தங்களுடைய 4ஆவது வெற்றியை பதிவு செய்தது. இத்தனைக்கும் கத்துக்குட்டியாகவே பார்க்கப்படும் அந்த அணி உண்மையாகவே ஆரம்பத்தில் இந்த 4 வெற்றிகளை பெறும் என்று பெரும்பாலானவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

Advertisement

ஆனாலும் டெல்லியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை அசால்டாக ஆஃப்கானிஸ்தான் தோற்கடித்தது. அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக பதிவு செய்த ஆஃப்கானிஸ்தான் உலகக்கோப்பையில் 14 தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்தி வெற்றி வாகை சூடியது. அதே வேகத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பாகிஸ்தானையும் பந்தாடிய ஆஃப்கானிஸ்தான் 7 தொடர் தோல்விகளை நிறுத்தி வரலாற்றில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து மாபெரும் சரித்திரம் படைத்தது.

Advertisement

அதைத்தொடர்ந்து 1996 உலக சாம்பியன் இலங்கையையும் தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் தற்போது நெதர்லாந்தையும் வீழ்த்தி மொத்தம் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை முந்தி 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் தங்களுடைய அடுத்த 2 போட்டிகளில் வென்றால் அரையிறுதிச்சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு ஆஃப்கானிஸ்தானுக்கு பிரகாசமாகியுள்ளது.

இருப்பினும் அடுத்ததாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளுக்கு எதிராக மோதுவதால் அது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதுவரை வெளிப்படுத்திய கடின உழைப்பால் கிடைத்த 4 வெற்றிகளால் ஆஃப்கானிஸ்தானுக்கு மற்றுமொரு பரிசு கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் கோப்பைக்கு தற்போது நடைபெறும் உலகக் கோப்பையின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகளே தேர்வு செய்யப்பட உள்ளன.

அதில் முதல் அணியாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் ஏற்கனவே தேர்வாகியுள்ளது. அதைத்தொடர்ந்து புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் இருக்கும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் இப்போதே தேர்வாகியுள்ளன. குறிப்பாக அடுத்த 2 போட்டிகளில் தோற்றாலும் ஆஃப்கானிஸ்தான் டாப் 6 இடத்திற்கு கீழே செல்லாது என்பதால் 2025 சாம்பியன்ஸ் கோப்பை இப்போதே தகுதி பெற்றுள்ளது.

சொல்லப்போனால் வரலாற்றிலேயே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஆஃப்கானிஸ்தான் தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். அப்படி புதிய வரலாற்றை எழுதி ஆஃப்கானிஸ்தான் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு டாட்டா காட்டி பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இன்னும் 2 இடங்கள் தகுதி பெறுவதற்கு காலியாக இருக்கும் நிலையில் புள்ளிப்பட்டியில் கடைசி இடத்தில் தவிக்கும் இங்கிலாந்து கடைசி 2 போட்டியில் வென்றால் மட்டுமே சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News