பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம் - இப்ராஹிம் ஸத்ரான்!

Updated: Fri, Jan 12 2024 11:34 IST
பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம் - இப்ராஹிம் ஸத்ரான்! (Image Source: Google)

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று மொஹாலியில் நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியிடம் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்களையும், அஹ்மத்துல்லா ஓமர்சாய் 29 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே 40 பந்துகளை சந்தித்து 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹீம் ஸத்ரான், “இந்த போட்டியில் நாங்கள் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன். மேலும் போட்டியின் ஆரம்பத்திலேயே டாசையும் இழந்ததால் அதுவும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக போராடியதாக நினைக்கிறேன். நாங்கள் பவர்பிளே ஓவர்களிலேயே சிறப்பான துவக்கத்தை அளிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் எங்களால் அதிரடியை காட்ட முடியவில்லை.

எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் யாராவது ஒருவர் 14-15 ஓவர்கள் வரை நின்று விளையாடி இருந்தால் நிச்சயம் இந்திய அணியின் மீது அழுத்தத்தை அளித்திருக்க முடியும். அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருந்ததால் பந்துவீச்சாளர்களால் பந்தை கிரிப் செய்ய முடியவில்லை. எங்களது அணியின் பந்துவீச்சில் எந்த ஒரு பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனாலும் பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். அதேபோன்று பேட்டிங்கிலும் முன்னேற்றத்தை காண வேண்டும்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை