மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Updated: Sat, Feb 01 2025 20:06 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே ஏமாற்றமளிக்கும் விதமாக மையா பௌச்சர் 5 ரன்னிலும், டாமி பியூமண்ட் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் - நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் ஹீதர் நைட் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சோபியா டங்க்லியும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய டேனியல் வைட் 22 ரன்னிலும், ஏமி ஜோன்ஸ் 3 ரன்னிலும், எக்லெஸ்டோன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 170 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளையும், கிம் கார்த், டேர்சி பிரௌன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியிக்க் ஜார்ஜியோ வோல் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதன்பின் போப் லிட்ச்ஃபீல்ட் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அனபெல் சதர்லேண்டுடன் இணைந்த கேப்டன் அலிசா ஹீலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சதர்லேண்ட் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த கேப்டன் அலிசா ஹீலி 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சதர்லேண்ட் - பெத் மூனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.  பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் 21 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 163 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விலையாடிய பெத் மூனி தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 106 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 440 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டன் 5 ர்விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம் 270 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து மகளிர் அணியில்மையா பௌச்சர் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த டாமி பியூமண்ட் - கேப்டன் ஹீதர் நைட் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாமி பியூமண்ட் 47 ரன்களுக்கும், கேப்டன் ஹீதர் நைட் 32 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்டும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனையடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து மகளிர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அலானா கிங் 5 விக்கெட்டுகளையும், ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன், ஆஷஸ் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலானா கிங் தொடர் நாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை