IND vs SL: ரணதுங்கா கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு; முன்னாள் வீரரின் காட்டமான கருத்து!
விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.
வரும் 13ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா வலுவான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, இரண்டாம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், இது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்திருந்தார்.
ரணதுங்காவின் விமர்சனத்துக்கு, இந்திய முன்னாள் வீரர்கள், தீப்தாஸ் குப்தா, ரிதீந்தர் சோதி, ஆகாஷ் சோப்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் பதில் கருத்துகளைத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ரணதுங்காவின் விமர்சனத்திற்கு இலங்கை அணியின் முன்னாள் வீரரான அரவிந்த டி சில்வா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அரவிந்த டி சில்வா,“இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகள் உள்ளனர். எனவே எந்த அணியையும் இரண்டாம் தர அணி என்று கூறிவிடமுடியாது. அதிலும் உலகமே எதிர்கொண்டிருக்கும் இந்த பெருந்தொற்று நேரத்தில், வீரர்களை சுழற்சி முறையிலேயே களமிறக்க முடியும். எதிர்காலத்திலு இதுமாதிரி அணிகளை பிரித்து அனுப்பும் சூழல் உருவாகும். எனவே இரண்டாம் தர, மூன்றாம் தர அணி என்றெல்லாம் கூறிவிடமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.