பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ரிஷப் பந்த்!

Updated: Tue, Apr 30 2024 12:14 IST
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ரிஷப் பந்த்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 13 ரன்களுக்கும், அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷாய் ஹோப், அபிஷேக் போரால் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் அணியை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பில் இருந்த கேப்டன் ரிஷப் பந்தும் 27 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

மேலும் நட்சத்திர வீரர்கள் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குஷாக்ரா ஆகியோரும் சொற்ப ரன்க்ளுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய குல்தீப் யாதவ் 35 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு ஃபினிஷிங்கையும் கொடுத்தார்.  இதன்மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைக் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக  விளையாடிய பில் சால்ட் 68 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களையும் சேர்க்க, 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த், “இன்றைய போட்டியில் நாங்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது தவறில்லை என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட்டாக சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாகவே 150 ரன்களி மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனலும் நாங்கள் எங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

நாங்கள் கடந்த 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என நினைத்தோம். ஆனால் இன்றைய போட்டியில் எங்களால் அதனை செயல்படுத்த முடியவில்லை. ஒருவேளை இந்த போட்டியில் நாங்கள் 180 அல்லது 210 ரன்களை எடுத்திருந்தால் அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் பேட்டிங்கில் சரியாக செயல்படாததால் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு போதுமான ரன்களை கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை