ஆசிய கோப்பை 2023: கண்டியில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்?

Updated: Wed, Jul 19 2023 14:30 IST
ஆசிய கோப்பை 2023: கண்டியில் மோதும் இந்தியா - பாகிஸ்தான் (Image Source: Google)

ஆசிய கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்க முடியாது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுப்போம் என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலடியாக எங்கள் நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்கள் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் அறிவித்தது. அப்போதிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த விவகாரம் இருநாட்டுக்குமிடையே அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தி வந்த நிலையில் பாகிஸ்தானிடம் உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை கொடுத்ததால் வேறு வழியின்றி அந்த அணி பங்கேற்கும் போட்டிகளை அந்நாட்டில் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது.

அதே போல் என்ன ஆனாலும் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று அடம் பிடித்து வந்த இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி உட்பட எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் திட்டமிட்டுள்ளது. அத்துடன் இந்த ஆசியக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடராக நடைபெறும் என்றும் ஆசிய கவுன்சில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ரமீஸ் ராஜா மற்றும் நஜாம் சேதி ஆகியோரை தொடர்ந்து பாகிஸ்தான் வாரியத்தின் புதிய தலைவராக ஜாகா அஸ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆசிய கோப்பை 2023 தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வைத்துள்ள நிலையில் அதற்கான அட்டவணையை அவர் இன்று மாலை 7.45 மணிக்கு லாகூரில் நடைபெறும் பிரத்யேக நிகழ்ச்சியில் வெளியிடுவார் என்று அந்நாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன் படி இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி இலங்கையில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நிறைவுக்கு வர உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் கோப்பைக்காக மோத உள்ளன. இந்த தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி இலங்கையில் இருக்கும் கண்டி மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தொடரில் 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் தலா ஒரு முறை மோத உள்ளன. அதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் சிறப்பாக செயல்பட்டு டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஆசிய கோப்பையை வெல்வதற்கு மோதும் வகையில் இந்த தொடரின் ஃபார்மட் அமைக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை