ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பெத் மூனி 61 ரன்களையும், தஹிலா மெக்ராத் 44 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் மந்தனா அரைசதம் கடந்தும் அசத்தினார்.
அதன்பின் 23 ரன்களில் ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்க, 52 ரன்களோடு மந்தனாவும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சரிவர சோபிக்காததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது.மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தஹிலா மெக்ராத் ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகியாவும் தேர்வு செய்யப்பட்டார்.