ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் இன்று தொடங்கியது. இரு அணிகளும் வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன.
மேலும், 15 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெறுவதாலும், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
அதன்படி இன்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை களமிறங்கியது.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி இந்த இணை 93 ரன்களைச் சேர்த்தது. பின் 31 ரன்களில் ஷஃபாலி வார்மா விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஸ்மிருதி மந்தனா 61 ரன்களுடனும், பூனம் ராவத் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சோபி மோலினக்ஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.