கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராஃப்ட் உப்புத்தாள் கொண்டு பந்தை தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயன்றது அங்கிருந்த கேமராவின் மூலம் அம்பலமானது. பந்து ‘ஸ்விங்’ ஆவதற்கு வசதியாக அவர் இவ்வாறு செய்ததும், இந்த திட்டத்தின் பின்னணியில் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருந்ததும், அதனை கேப்டன் ஸ்டீவன் சுமித் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பான்கிராப்டுக்கு 9 மாதமும், ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதித்தது.

Advertisement

இந்த விவகாரத்தில் பான்கிராப்ட் 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய புயலை கிளப்பி உள்ளார். தற்போது இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பந்தை நான் தேய்த்தது பவுலர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்கான தான். எனவே இந்த விஷயம் அணியில் உள்ள பந்து வீச்சாளர்களுக்கு தெரிந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த பவுலருக்கு தெரியும் என்று சொல்லவில்லை.

Advertisement

இதனால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மைக்கேல் கிளார்க், கில்கிறிஸ்ட் உள்பட பலர் இந்த விஷயத்தில் முழுமையாக விசாரணை நடத்தி சந்தேகம் மீண்டும் எழாமல் இருக்க தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணிக்காக நாங்கள் நேர்மையுடன் விளையாடி வருகிறோம். அதில் பெருமிதம் கொள்கிறோம். கேப்டவுன் டெஸ்ட் விவகாரத்தில் எங்களுடைய நேர்மையை கடந்த சில நாட்களாக முன்னாள் வீரர்களும், சில பத்திரிகையாளர்கள் கேள்விக்குறியாக்கி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. 

இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு நாங்கள் ஏற்கனவே பலமுறை பதில் அளித்து விட்டோம். இருப்பினும் இந்த பிரச்சினையில் நாங்கள் மீண்டும் முக்கிய விஷயங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று நினைக்கிறோம். ஸ்டேடியத்தின் பெரிய திரையில் ஒளிபரப்பான காட்சியை பார்க்கும் வரைக்கும் வெளியில் இருந்து கொண்டு வந்த பொருளை வைத்து பான்கிராஃப்ட் பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த விஷயம் எதுவும் எங்களுக்கு தெரியாது. நாங்கள் பவுலர்கள் என்ற காரணத்தால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து எங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறார்கள். 

இந்த போட்டியில் நடுவராக பணியாற்றிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். பந்தை தேய்க்கும் காட்சி டெலிவிஷனில் வெளியான பிறகு பந்தை ஆய்வு செய்த நடுவர்கள் அதனை மாற்றவில்லை. ஏனெனில் பந்தை சேதப்படுத்தியதற்கான அறிகுறி எதுவும் அதில் தெரியவில்லை. இதனையெல்லாம் அன்று களத்தில் நடந்தது தவறில்லை என்று சொல்வதற்கு காரணமாக குறிப்பிடவில்லை. அன்று நடந்தது தவறாகும். அதேபோல் ஒருபோதும் நடந்து இருக்க கூடாது. இந்த விஷயத்தில் இருந்து நாங்கள் நிறைய பாடம் கற்றுக் கொண்டோம். 

Advertisement

எங்களது நடத்தை, ஆடும் விதம், ஆட்டத்தை மதிப்பது ஆகியவைகளில் நல்லவிதமான மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் நினைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மனிதராகவும், வீரராகவும் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் எங்களது அர்ப்பணிப்பு தொடரும். எங்களை குறித்து வதந்திகள் பரப்ப படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News