பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், ஹராரேவில் இன்று 2ஆவது டெஸ்ட் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் ஆடி வருகிறது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அபித் அலியும் இம்ரான் பட்டும் களமிறங்கினர் . இதில் இம்ரான் பட் 2 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அபித் அலியுடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார்.
அபித் அலி - அசார் அலி இணைந்து மிகச் சிறப்பாக ஆடிய இருவருமே சதமடிக்க, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 246 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடி சதமடித்த அசார் அலி 126 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் பாபர் அசாம் 2 ரன்னிலும், ஃபவாத் ஆலம் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி சதமடித்த தொடக்க வீரர் அபித் அலி, முதல் நாள் ஆட்ட முடிவில் 118 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் அடித்துள்ளது. ஜிம்பாப்வே அணி தரப்பில் முசரபானி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.