நடைபெற்று முடிந்த வங்கதேச ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தவறான தீர்ப்பு கோபமடைந்து ஸ்டம்ப்களை நொறுக்கி நடுவர்களை திட்டிக் கொண்டே சென்றது பெரிய சர்ச்சையை உண்டாக்கி கடைசியில் 2 போட்டிகளில் விளையாட தடையை பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது. அந்த வரிசையில் தற்போது உள்ளூர் தமிழக தொடரில் நடுவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பேட்ஸ்மேன் கொந்தளித்த தருணம் அரங்கேறியுள்ளது. 

Advertisement

அதாவது தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய அசோசியேசன் சார்பில் டிவிசன் 1 உள்ளூர் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஜாலி ரிவர்ஸ் மற்றும் எங் ஸ்டார் கிளப் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜாலி ரிவர்ஸ் நிர்ணயித்த 164 ரன்களை துரத்திய எங் ஸ்டார்ஸ் அணி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் பாபா அபாரஜித் சக வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்து நங்கூரமாக பேட்டிங் செய்து சரிவை சரி செய்து வெற்றிக்கு போராடினார். 

Advertisement

குறிப்பாக சுதர்சனுடன் 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தம்முடைய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த அவர் ஹரி நிஷாந்த் வீசிய 18வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்டார். இருப்பினும் பிட்ச்சான பின் திடீரென சுழன்று உள்ளே வந்த பந்தை சரியாக கணிக்க தவறிய அவருடைய காலில் பட்ட பந்து ஷார்ட் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்த கங்கா ஸ்ரீதர் ராஜுவிடம் சென்றது. அதை தரையோடு தரையாக தாவி பிடித்த ஸ்ரீதர் ராஜு மற்றும் அவருடைய அணியினர் அவுட் கேட்ட போது நடுவர் கையை உயர்த்தினார். ஆனால் எல்பிடபிள்யூ முறையில் நடுவர் அவுட் கொடுத்த நிலையில் பந்து தம்முடைய பேட்டில் பட்டிருக்கும் என்று நினைத்த அபாரஜித் ஃபீல்டர் சரியாகப் பிடிக்கவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக தரையில் ஒன் பவுன்ஸாகி வந்த பந்தை ஃபீல்டர் பிடித்ததாக கருதிய அவர் நிச்சயமாக அவுட்டில்லை என்று நடுவரிடம் சொன்னார். அதாவது எல்பிடபுள்யூ முறையில் கொடுத்த அவுட்டை கேட்ச் பிடித்ததற்கு கொடுத்ததாக நினைத்து அபாரஜித் அதிருப்தியை வெளிப்படுத்தி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு நடுவர் கொடுத்த பதில்களால் சமாதானம் ஆகாத அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெவிலியன் செல்ல மறுப்பு தெரிவித்தார்.

போதாகுறைக்கு அந்தப் போட்டியில் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் இல்லாததால் இரு தரப்புக்கும் இடையே பெரிய குழப்பம் ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் “நடுவரே அவுட் கொடுத்து விட்டதால் பேசாமல் பெவிலியன் செல்ல வேண்டியது தானே” என்று சொன்ன எதிரணி வீரர்களுடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் சுமார் 5 நிமிடங்கள் வரை மெகா வாக்குவாதத்தில் ஈடுபட்ட அபாரஜித் தாம் அவுட்டில்லை என்று சொன்னாலும் தாங்கள் கொடுத்த தீர்ப்பை வாபஸ் வாங்காத நடுவர்கள் கடைசி வரை விடாப்படியாக நின்றனர்.

 

Advertisement

மேலும் நடுவர் கொடுத்த எல்பிடபுள்யூ தீர்ப்பின் படி ரிப்ளையில் பார்க்கும் போது பந்து ஸ்டம்பில் படாதது ஓரளவு தெரிய வந்தது. அதனால் கேட்ச்சும் கிடையாது எல்டபுள்யூ அவுட்டும் என்பதாலேயே அபரஜித் அந்தளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில் நடுவர் கொடுக்கும் தீர்ப்பே இறுதியானது என்ற அந்த காலம் முதல் இந்த காலம் வரை நிலுவையில் இருக்கும் விதிமுறையின் படி வேறு வழியின்றி அபாரஜித் ஏமாற்றத்துடன் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News