சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை நிகழ்த்திய பாபர் ஆசாம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி கராச்சியில் இன்ற் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி விளையாடி பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்களைக் குவித்தது. இதில் கேப்டன் பாபர் ஆசம் சதமடித்து அசத்தியதுடன், 107 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது, 97 ஈன்னிங்ஸ்களில் 5000 ரன்களை கடந்துள்ள பாபர் அசாம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைச் சேர்த்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். அவரை தொடர்ந்து ஹசிம் ஆம்லா 101 இன்னிங்ஸ்களிலும், சர் விவ் ரிச்சர்ட்ஸ் 114 இன்னிங்ஸ்களிலும் 5000 ரன்களை எட்டியுள்ளனர். அவர்களை தொடர்ந்து, விராட் கோலி 114 இன்னிங்ஸ்களிலும், டேவிட் வார்னர் 115 இன்னிங்ஸ்களிலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் 5ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த 14ஆவது பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம். அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் தான், பாகிஸ்தான் சார்பில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். வெகு விரைவிலேயே பாகிஸ்தான் சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாபர் ஆசம், அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற இன்சமாம் உல் -ஹக்கில் சாதனையை முறியடிக்கக் கூடும்.