தினேஷ் கார்த்திக்கின் பேட்டிக்கு பதிலளித்த பாபர் ஆசாம்!

Updated: Thu, Jun 02 2022 20:46 IST
Babar Azam reacts after Dinesh Karthik backs Pakistan captain to become No. 1 batter in all three fo (Image Source: Google)

ஐபிஎல் 15வது சீசனில் ரசிகர்கள் அனைவருக்கும் வியக்கும் அளவிற்கு தரமான கம்பேக் கொடுத்திருந்தார் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக். 6வது, 7வது வீரராக களமிறங்கிய அவர் 16 போட்டிகளில் 330 ரன்களை விளாசினார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் போது தினேஷ் கார்த்திக் ஒரு சுவாரஸ்ய பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “ பாபர் ஆசாம் ஒரு அற்புதமான வீரர். மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் விளையாடினாலும் நன்றாக விளையாடுகிறார். பாகிஸ்தான் நாட்டிற்காக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். அவர் பேட்டிங் திறமையின் உச்சத்தில் இருக்கிறார். அவரால் நிச்சயமாக மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடிக்க முடியும். 

‘ஃபேப் ஃபோர்’ (இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட்) வலுவான நிலையில் நீண்ட காலமாக இருக்கிறார்கள். நிச்சயமாக இவரும் இதில் சேர்ந்து ‘ஃபேப் ஃபைவ்’ ஆக மாற்றுவார். 

அவர் விளையாடும் போது இரண்டு விசயங்களைப் பார்த்து பிரமித்து இருக்கிறேன். முன்னோக்கிச் சென்று ஆடினாலும் பின்னோக்கிச் சென்று ஆடினாலும் சமநிலையில் பந்தை அடிக்கிறார். பெரும்பாலும் அவர் கண்களுக்கு கீழே பந்தைப் பார்த்து அடிக்க ஆரம்பிக்கிறார். இது அபாரமான ஒன்று. இன்னொன்று, பந்து பிட்ச் ஆனதுமே அடித்து விடுவதுதான் அவரைச் சிறப்பான வீரராக மாற்றுகிறது. 

சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் போது ஆட்டத்தின் நுணுக்கங்களை சிறுது மாற்ற வேண்டும். சில நேரங்களில் 1% மாற்றம் பெரிய வெற்றிகளைத் தரும். அவர் சீக்கரமே அதை சரிசெய்து மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடம் பெறுவார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் கருத்து குறித்து பாபர் அசாம் பதில் அளித்துள்ளார். “ஒரு பேட்ஸ்மேனாக நம்பர் 1 ஆக வேண்டும் என்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். கடின உழைப்பால் 1 அல்லது 2 வடிவ கிரிக்கெட்டில் நம்பர் 1 ஆக இருக்கலாம். ஆனால் 3 வடிவ கிரிக்கெட்டிலும் இருப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. ஃபிட்னஸை பெரிதும் பார்க்க வேண்டும். கூடுதல் ஃபிடனஸுடன் இருக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து போட்டிகள் இருந்துக்கொண்டே இருக்கிறது. அதற்காக கூடுதலாக தயாராகி வருகிறேன். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக இருந்துவிட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது” எனக்கூறினார்.

தற்போதைக்கு ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 வீரராக பாபர் அசாம் தான் இருந்து வருகிறார். விராட் கோலி 2ஆவது இடத்தில் இருந்து வருகிறார். டெஸ்டை பொறுத்தவரையில் பாபர் அசாம் 5ஆவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை