பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதேசமயம் நேற்றைய தினம் ராவல்பிண்டியில் பெய்த கனமழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமாகியுள்ளது.
மேலும் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக இப்போட்டியின் முதல் செஷனானது முற்றிலுமாக கைவிடப்பட்டதுடன், உணவு இடைவேளைக்கு பிறகு டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் 2 ரன்களுக்கும், கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த சைம் அயூப் - சௌத் ஷகீல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 56 ரன்களில் சைம் அயூப் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணி தரப்பில் சௌத் ஷகீப் 57 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 24 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சொரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்முத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தது கடும விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் பாபர் ஆசாம் வெறும் இரண்டு பந்துகளை மட்டுமே சந்திருந்த நிலையில், ஷொரிஃபுல் இஸ்லாம் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிக்கூர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மேற்கொண்டு சமீப காலமாகவே பாபர் ஆசாம் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது அவர் டக் அவுட்டானதும் கூடுதல் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் பாபர் ஆசாம் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.