எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து விளையாடினோம் - பாபர் ஆசாம்!

Updated: Sat, Nov 04 2023 21:39 IST
எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து விளையாடினோம் - பாபர் ஆசாம்! (Image Source: Google)

உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு மறக்க முடியாத ஒரு போட்டியாக இன்று நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டி அமைந்திருக்கிறது. இன்றைய போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 401 ரன்கள் குவித்து அசத்தியது. ரச்சின் ரவீந்தரா இந்த தொடரில் மூன்றாவது முறையாக சதம் அடித்தார். இந்தப் போட்டிக்கு திரும்ப வந்த கேன் வில்லியம்சன் 95 ரன்கள் குவித்தார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு மழை ஒருபுறம் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது. இந்த சூழ்நிலையில் டக்வோர்த் லீவிஸ் விதியை மனதில் வைத்து, இலக்குக்கு அதிரடியாகவும் விளையாட வேண்டும், அதே சமயத்தில் விக்கெட்டையும் தரக்கூடாது என்கின்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடியது. இந்த ரன் துரத்தலில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஸமான் அவருடைய வழக்கமான இயல்பான பேட்டிங் பாணியில் பின்னி எடுத்தார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் சதம் அடித்தார்.

இறுதியாக பாகிஸ்தான் 25.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் வந்து நிற்காமல் பெய்தது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க, பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் வீழ்த்தியது எப்படி என்பது குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து விளையாடினோம். 41 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட வேண்டும் என்றால் ஒரு நல்ல பாட்னர்ஷிப் அமைந்தாலே போதும். மேலும் இன்றைய நாளில் மழை வரப்போகிறது என்று எங்களுக்கு கண்டிப்பாக தெரியும்.

ஆனால் இவ்வளவு மழை பெய்து ஆட்டமே நிறுத்தப்படும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம் என்பதை முடிவெடுத்தோம். ஃபகர் ஸமான் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் என்னால் முடிந்தவரை பக்கர் சமான் பேட்டிங் செய்யும் அளவுக்கு ஸ்ட்ரைக் வழங்கினேன். மைதானத்தில் ஒரு முனையில் குறைந்த அளவில்தான் பவுண்டரி தூரம் இருந்தது .

எனவே அந்தப் பகுதியை நன்றாக பயன்படுத்திக் கொண்டு நாங்கள் ரன் சேர்க்க வேண்டும் என நினைத்தோம். நாங்கள் எப்போதுமே 100% எங்களுடைய முயற்சியை வெளிப்படுத்துகிறோம் சில சமயம் நாங்கள் எதிர்பார்த்தது போல் செயல்பட முடிவதில்லை. நாங்கள் அடுத்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் பாசிட்டிவாக விளையாட தான் முயற்சி செய்கிறோம். நாங்கள் ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொண்டுதான் விளையாடுகிறோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை