வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கி இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து லிட்டன் தாஸ் 113 ரன்களுடனும். முஷ்பிக்கூர் ரஹீம் 82 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் லிட்டன் தாஸ் 114 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த முஷ்பிக்கூர் ரஹீம் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் வங்கதேச அணி 330 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 5 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, ஃபஹீம் அஷ்ரஃப் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அபித் அலி - அப்துல்லா ஷஃபிக் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 145 ரன்களைச் சேர்த்தது. இதில் அபித் அலி 93 ரன்களுடனும், அப்துல்லா ஷஃபிக்52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.