BAN vs SL, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மெண்டிஸுடன் இணைந்த கமிந்து மெண்டிஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 36 ரன்களிக் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 37 ரன்கள் எடுத்திருந்த கமிந்து மெண்டிஸும் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
அதன்பின் அதிரடியாக விளையாடிய கேப்டன் சரித் அசலங்கா ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 28 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய தசுன் ஷனகா 20 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - சௌமீயா சர்கார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சௌமியா சர்க்கார் 26 ரன்களுக்கு விக்கெட்டை, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியின் வெற்றியையு உறுதிசெய்தார். இப்போட்டியில் ஆட்டமிழக்கமால் இருந்த சாண்டோ 53 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் வங்கதேச அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.