BAN vs ZIM, 3rd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் - தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவ்ர்களைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 21 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் வங்கதேச அணி 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த தாவ்ஹித் ஹிரிடோய் - ஜகார் அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தாவ்ஹித் ஹிரிடோய் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஜகார் அலியும் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இறுதியில் மஹ்முதுல்லா 9 ரன்களையும், ரிஷத் ஹொசைன் 6 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளஸ்ஸிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜெய்லார்ட் கும்பி 9 ரன்களுக்கும், பிரையன் பென்னட் 5 ரன்களிலும், கிரேக் எர்வின் 7 ரன்க்ளுக்கும், கேப்டன் ரஸா ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் அந்த அணி 48 ரன்களுக்கே நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமறியது. அதன்பின் இணைந்த மருமணி - கிளைவ் மடாண்டே ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதில் மருமணி 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, கிளைவ் மடாண்டேவும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜானதன் காம்பெல் 21 ரன்களுக்கும், லுக் ஜோங்க்வா 2 ரன்களுக்கும், வெலிங்டன் மஸ்கட்ஸா 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஃபராஸ் அக்ரம் - பிளெஸிங் முசரபானி இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபராஸ் அக்ரம் 34 ரன்களையும், பிளெஸிங் முசரபானி 9 ரன்களை சேர்த்த நிலையிலும், ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் முகமது சைஃபுதின் 3 விக்கெட்டுகளையும், ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.