BAN vs ENG, 3rd ODI: இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!

Updated: Mon, Mar 06 2023 20:47 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 

இந்நிலையில் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராம் மைதானத்தில் நடைபெறது. இப்போடியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஏற்கெனவே வங்கதேச அணி முதலிரண்டு போட்டிகளில் தோல்விடைந்த நிலையில் ஆறுதல் வெற்றியையாவது பதிவுசெய்யும் நோக்கோடு களமிறங்கியது. 

அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் தமிம் இக்பால் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நமுல் ஹொசைன் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழப்பை தடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

அதன்பின் 53 ரன்களில் நஜ்முல் ஹொசைன் ஆட்டமிழக்க, 70 ரன்களைச் சேர்த்திருந்த முஷ்பிக்கூரும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

ஆனாலும் தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட ஷாகிப் அல் ஹசன் அரைசதம் கடந்த நிலையில் 75 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் வங்கதேச அணி அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - பிலிப் சால்ட் தொடக்கம் தந்தனர். இதில் ஜேசன் ராய் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மாலன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிலீப் சால்ட்டும் 35 ரனகளுக்கு விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் - சாம் கரண் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து பார்ட்னர்ஷிப் அமைக்க, இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ்ன் வின்ஸ் 38 ரன்களிலும், சாம் கரன் 23 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 26 ரன்களிலும், மொயீன் அலி 2 ரன்களோடும் ஆட்டமிழக்க, கிறிஸ் வோக்ஸ் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து வந்த வீரர்களும் சோபிக்க தவற இங்கிலாந்து அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் வங்கதேச அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை