டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மஹ்முதுல்லா!

Updated: Tue, Oct 08 2024 19:51 IST
Image Source: Google

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணியின் அனுபவ வீரர் மஹ்முதுல்லா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதன்படி இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். வங்கதேச அணிக்காக கடந்த 2007ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் மஹ்முதுல்லா 138 டி20 போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்களுடன் 2,394 ரன்களைக் குவித்துள்ளார். 

மேற்கொண்டு பந்துவீச்சை பொறுத்தவரையில் 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2021அம் ஆண்டே ஓய்வை அறிவித்த மஹ்முதுல்லா தற்சமயம் டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருப்பது வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பது குறித்து அவர் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மஹ்முதுல்லா, “இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரின் கடைசி ஆட்டத்திற்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பே இந்த முடிவு செய்திருந்தேன். மேலும் இதுகுறித்து நான் எனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்தேன். மேலும் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க, கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தலைமை தேர்வாளர் மற்றும் வாரியத் தலைவர் ஆகியோரிடமும் நான் ஆலோசித்தேன்.

Also Read: Funding To Save Test Cricket

எனக்கும் அணிக்கும் இந்த வடிவத்தில் இருந்து முன்னேற இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்குள் உலகக் கோப்பை வரவுள்ளது. அதனால் நான் எனது ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த ஆயத்தமாகி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை