பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உலக சாதனை படைத்த பாஸ் டி லீட்!
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐசிசி-யின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நெதர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷாக்கில் ஆகியோர் 68 ரன்களை குவித்து அசத்தினர்.
பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியில் நெதர்லாந்து அணி தோல்வியை தழுவி இருந்தாலும் அந்த அணி சார்பாக விளையாடிய பாஸ் டீ லீட் உலகக் கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் இந்த போட்டியின் போது 9 ஓவர்களை வீசிய அவர் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு மட்டுமில்லாமல் நான்காவது இடத்தில் களமிறங்கி 68 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 67 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து அரைசதம் அடித்த இளம் வீரர் என்கிற சாதனையை அவர் இன்று படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.