தொடரை வென்ற இந்திய அணிக்கு கங்குலி பாராட்டு!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதில் நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது அபாரமான ஆட்டம் காரணமாக 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா.
அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் சூழலில், இந்திய அணியின் இந்த தொடர்ச்சியான வெற்றி புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோர் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்தனர். இந்த நிலையில் இங்கிலாந்து மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளதைத் தொடர்ந்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கங்குலி தனது ட்விட்டர் பதிவில், ''சூப்பர் ஆட்டம். டெஸ்ட் தொடர் சமன், ஒருநாள், டி20-களில் வெற்றி. இங்கிலாந்து நாட்டில் இது எளிதல்ல. டிராவிட், ரோகித் சர்மா, விராட் கோலி சிறப்பாக செயல்பட்டனர். ரிஷப் பந்த் சிறப்பு' எனப் பதிவிட்டுள்ளார்.