உலகக்கோப்பையை வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு!
மகளிருக்கான அண்டர் 19 உலகக்கொப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக கோங்காடி வி த்ரிஷா 24, சௌம்யா மணீஷ் திவாரி 24, ஷபாலி வர்மா 15 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அறிமுகத் தொடரிலேயே இந்தியா யு19 அணி சாம்பியன் ஆனது. இந்த வெற்றியையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய அணி ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சியில் உள்ளது மற்றும் உலகக் கோப்பை வெற்றி மகளிர் கிரிக்கெட்டின் அந்தஸ்தை பல படிகள் உயர்த்தியுள்ளது. ஒட்டுமொத்த குழு மற்றும் துணை ஊழியர்களுக்கு 5 கோடி பரிசுத் தொகையாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நிச்சயமாக ஒரு பாதையை உடைக்கும் ஆண்டு” என்று பதிவிட்டுள்ளார்.