ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது - அருண் துமல்!

Updated: Wed, Jul 12 2023 14:29 IST
BCCI Secy Jay Shah Will Not Visit Pakistan For Asia Cup 2023: Report (Image Source: Google)

ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது. இதையடுத்து ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இருப்பினும் ஆசியக் கோப்பைக்கான அட்டவணை வெளியாகாததால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் பயணம் செல்லவுள்ளதாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனிடையே நாளை தென் ஆப்பிரிக்காவில் ஐசிசியின் அலுவல் கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து நாடுகளின் கிரிக்கெட் சங்க தலைவர்களும் தென் ஆப்பிரிக்கா வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் சாகா அஷ்ரப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த சந்திப்பு குறித்து ஐபிஎல் சேர்மன் அருண் துமல் கூறுகையில், “பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிபி தலைவர் சாகா அஷ்ரப்பை சந்தித்தார். அப்போது ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது. திட்டமிட்டதை போல் பாகிஸ்தானில் 4 போட்டிகள் நடக்கவுள்ளன. இலங்கையில் 9 போட்டிகள் நடக்கவுள்ளன. பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் செய்வது தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை.

2010ஆம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பையில் எப்படி இந்திய அணி இலங்கையில் உள்ள டம்புலா மைதானத்தில் அனைத்து போட்டிகளிலும் ஆடியதோ, அதேபோல் இம்முறையும் விளையாடவுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நேபாள் அணியுடன் மட்டுமே மோதவுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் - வங்கதேசம், வங்கதேசம் - இலங்கை மற்றும் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை