இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி அங்கு முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை மழையால் 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அதன் பின் நடந்த டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டு 2 – 1 (3) என்ற கணக்கில் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்றது. அந்த நிலைமையை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 17இல் உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

முன்னதாக 2017 முதல் பெரும்பாலும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்ததால் அதிரடியாக நீக்கப்பட்ட ஜோ ரூட்டுக்கு பதில் இங்கிலாந்தின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளராக அதிரடியை மட்டும் விரும்பக்கூடிய நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கலம் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது தலைமையில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை சொந்த மண்ணில் எதிர்கொண்ட அந்த அணி 3 போட்டிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட 250+ ரன்களை 4ஆவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி அசால்டாக சேஸிங் செய்து 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது. அதனால் பூரிப்படைந்த அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் இந்த புதிய கூட்டணியின் அதிரடி பாதைக்கு “பஸ்பால்” என பெயரிட்டு கொண்டாடத் துவங்கினர்.

Advertisement

அதை தொடர்ந்து நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. அதனால் உலகிலேயே “பஸ்பால்” எனும் இங்கிலாந்தின் புதிய அதிரடி பாதைக்கு நிகர் வேறு எதுவுமில்லை என்று அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடினர். அதைவிட இந்த உலகிற்கே டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கப் போவதாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்.

அதனால் தென் ஆப்பிரிக்காவையும் அசால்டாக தோற்கடித்து விடுவோம் என்று இப்போட்டியில் களமிறங்கிய அந்த அணி காகிசோ ராபடா போன்ற பந்துவீச்சாளரின் தெறிக்கவிடும் பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் முறையே 165, 149 என 2 இன்னிங்சிலும் 200 ரன்களைக் கூட தாண்டாமல் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த அணியை நிறைய முன்னாள் வீரர்களும் உலக ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர். அத்துடன் இப்போதாவது தரத்தையும் மன தைரியத்தையும் சோதிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போல எப்போதும் அதிரடியாக விளையாடி வெல்ல முடியாது என்பதை இங்கிலாந்து புரிந்திருக்கும் என ரசிகர்கள் கூறினார்கள்.

அதனால் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று தொடங்கும் இத்தொடரின் 2ஆவது போட்டியில் அடிப்படையை பின்பற்றி இங்கிலாந்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லண்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் தங்களது திட்டங்கள் எடுபடாமல் போனது என்பதற்காக தங்களது “பஸ்பால்” சோடை போய் விட்டதாக அர்த்தமல்ல என்று அறிவித்துள்ள இங்கிலாந்து என்ன ஆனாலும் அதிரடியை கைவிடப் போவதில்லை என மீண்டும் சவால் விடுத்துள்ளது. 

இதுகுறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்,“நாங்கள் விளையாட விரும்பும் ஒரு குறிப்பிட்ட வழி (பஸ்பால்) உள்ளது. அதை நாங்கள் சிறப்பாக செயல்படுத்தினால் எங்களை அவர்களால் வீழ்த்துவது கடினம் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் நாங்கள் அனைத்து நாட்களிலும் சிறந்து விளங்க முடியாது. இந்த போட்டி எங்களுக்கு சரியாக அமையவில்லை. அதற்காக அந்த தோல்வியை நாங்கள் மான்செஸ்டரில் நடைபெறும் போட்டி வரை எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

Advertisement

எப்போதுமே எதிரணி மீது அழுத்தத்தை போடுவதற்கு விரும்பும் நீங்கள் சில நேரங்களில் அதே அழுத்தத்தை உள்வாங்க வேண்டியிருக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் ரபாடா மற்றும் நோர்ட்ஜே ஆகியோர் பந்து வீசிய விதத்தில் தென் ஆப்பிரிக்கா கொடுத்த அழுத்தத்தை நாங்கள் உள் வாங்கியுள்ளோம். அதுபோன்று அழுத்தங்களை உள்வாங்கும் நாங்கள் அதை நேர்மறையாக எடுத்துக் கொள்கிறோம். அதே சமயம் தென் ஆப்பிரிக்கா அபாரமாக பந்து வீசியது.

எனவே சில நேரங்களில் நீங்கள் தோல்விக்கு கையை உயர்த்த வேண்டியுள்ளது. சர்வதேச அளவில் நீங்கள் விளையாடும் போது சில சமயங்களில் எதிரணியும் உங்களை விட சிறப்பாக செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News